கண்ணாடி உடைந்ததில் சென்னை விமான நிலையத்தில் அதிர்ச்சி

565பார்த்தது
சென்னை விமான நிலையத்தில் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு வரை, தொடர்ச்சியாக கண்ணாடிகள் உடைந்து விழுந்தன. உள்நாட்டு விமான முனையம், சர்வதேச முனையம் என்று மாறி மாறி கண்ணாடிகள் உடைந்து விழுவது வாடிக்கையாக இருந்து வந்தது.

சுவர்களின் பதித்துள்ள கண்ணாடிகள், கண்ணாடி கதவுகள், மேற்கூறை பால் சீலிங்குகள், சுவர்களில் பதிக்கப்பட்டுள்ள கிரானைட் கற்கள் என்று மாறி மாறி விழுந்து, 90 முறைகளையும் தாண்டி, இந்த விபத்துக்கள் நடந்து வந்தன. நல்வாய்ப்பாக பெரிய அளவில் காயங்கள், உயிர் சேதங்கள் ஏற்படாமல், ஒரு சிலர் மட்டும் லேசான காயங்களுடன் உயிர் தப்பினர். இந்த விபத்துகளை தடுப்பது, சென்னை விமான நிலைய அதிகாரிகளுக்கு பெரும் சவாலாக விளங்கியது.

இந்நிலையில், உள்நாட்டு முனையத்தில், வெளி மாநில கவர்னர், வெளிநாட்டு தூதர்கள் உள்ளிட்ட விஐபி பயணிகள் வருகை பகுதியான நான்காம் எண் கேட்டில், 7அடி உயரமுடைய கண்ணாடி கதவு, திடீரென நொறுங்கி விழுந்தது. இதனால் அப்பகுதியிலிருந்த பயணிகள், பாதுகாப்பு படை வீரர்கள் அலறி அடித்துக் கொண்டு ஓடினர்.

மீண்டும், கண்ணாடி கதவு தானாகவே உடைந்து நொறுங்கியதால் அதிர்ச்சி அடைந்த அதிகாரிகள் இதுகுறித்து ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். சென்னை விமான நிலையம் என்றாலே, கண்ணாடி உடைந்து விழும் விமான நிலையம் தானே என்று கேட்கும் அளவுக்கு இருக்கிறது. இந்நிகழ்வு விமான நிலையத்தில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தியது.

தொடர்புடைய செய்தி