சென்னையில், சூரப்பட்டு, போரூர், தாம்பரம் ஆகிய இடங்களில், பயணியரை ஏற்றி, இறக்க ஆம்னி பேருந்துகளுக்கு அனுமதியளிக்கப்படும்' என, சென்னை உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு தெரிவித்துள்ளது.
சென்னையை அடுத்த கிளாம்பாக்கத்தில், புதிதாக கட்டப்பட்ட பேருந்து நிலையத்தில் இருந்து, தென் மாவட்டங்களுக்கு ஆம்னி பேருந்து இயக்க, போக்குவரத்து துறை ஆணையர் கடந்த மாதம் உத்தரவு பிறப்பித்தார்.
இதை எதிர்த்து, உயர் நீதிமன்றத்தில், ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் வழக்கு தொடர்ந்தனர். சென்னையில், குறிப்பிட்ட இடங்களில் பயணியரை ஏற்றி, இறக்க அனுமதிக்கும்படி கோரினர்.
இவ்வழக்கு, நீதிபதி மஞ்சுளா முன், விசாரணைக்கு வந்தது. ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் கோரிக்கை குறித்து, அரசுடன் பேசி தீர்வு காணும்படி, நீதிபதி அறிவுறுத்தி இருந்தார்.
தொடர்ந்து, கடந்த 3ம் தேதி அதிகாரிகள் மற்றும் ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் இடையே பேச்சு நடந்தது. வழக்கு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.
அரசு தரப்பில் ஆஜரான அட்வகேட் ஜெனரல் பி. எஸ். ராமன், ''சூரப்பட்டு, போரூர், தாம்பரம் ஆகிய இடங்களில், பயணியரை ஏற்றி, இறக்க, அனுமதி அளிக்கவும், பெருங்களத்துாரில் பயணியரை இறக்க மட்டும் அனுமதிக்கவும் முடிவெடுக்கப்பட்டு உள்ளது, '' என்றார்.