செங்கல்பட்டு மாவட்டம்
மாமல்லபுரம் அடுத்த எடையூர் ஊராட்சி, கொக்கிலமேடு பகுதியைச் சேர்ந்த மீனவர் வெங்கடேசன் மனைவி ராஜாத்தி. ஊராட்சி துணைத் தலைவராக உள்ளார். கழிவுநீரர் வெளியேற்ற, பழைய வடிகால்வாயை உயர்த்தி கட்டுவது தொடர்பாக, மீனவர்கள் சிலர், ராஜாத்தியிடம் தகராறு செய்தனர். இதுகுறித்து, மாமல்லபுரம் போலிசில் ராஜாத்தி புகார் அளித்து, பின் திரும்ப பெற்றார். இதையடுத்து, மீனவர் சபை கட்டுப்பாட்டை அவர் மீறியதாக, மீனவ சபையினர் கோபம் அடைந்தனர்.
அவரது குடும்பத்தினர், அவருக்கு ஆதரவாக செயல்பட்ட குடும்பத்தினரை, ஊரை விட்டு விலக்கியும், கடலில் மீன்பிடிக்க தடை விதித்தும், மீனவ சபையினர் கட்டுப்பாடு விதித்ததாக சர்ச்சை ஏற்பட்டது.
ஆனால், அம்மன் கோவில் ஆடி உற்சவத்தை, பிரச்னையின்றி நடத்த கருதியே, கட்டுப்பாட்டை விலக்கியதாக அறிவித்து, ஏழு குடும்பத்தினரின் கட்டுப்பாடுகள் நீடிப்பதாக, மீனவ சபையினர் தெரிவித்தனர். அதனால், ஆறு மாதங்களாக பாதிக்கப்படுவதாக, ராஜாத்தி கடந்த 20ம் தேதி, மாவட்ட நிர்வாகத்திடம் மீண்டும் புகார் அளித்தார்.
ஏழு குடும்பத்திற்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளதா, அவை நீடிக்கிறதா என்பது குறித்து, தாலுகா, வட்டார வளர்ச்சி, மீன்வளம் உள்ளிட்ட நிர்வாகத்தினர், விசாரித்து அறிக்கை அளிக்க வேண்டும் என, கலெக்டர் உத்தரவிட்டுள்ளதாக, வருவாய்த்துறை அலுவலர் ஒருவர் தெரிவித்தார்.