கள்ளக்குறிச்சியில், ஊராட்சி பணியாளர்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. கள்ளக்குறிச்சி ஊராட்சி பணியாளர்கள் கூட்டமைப்பின் சார்பில், 7 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று (ஜூன் 5) கலெக்டர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடந்தது. மாநில தலைவர் லட்சுமணன் தலைமை தாங்கினார். நிறுவன தலைவர் அமல்ராஜ் பேசினார்.
இதில் பணிநீக்கம் செய்யப்பட்ட கிராம சுகாதார ஊக்குவிப்பாளர்களுக்கு மீண்டும் பணி வழங்க வேண்டும். துப்புரவு காவலர்களுக்கு மாதந்தோறும் 5ம் தேதிக்குள் ஊதியம் வழங்க வேண்டும். நலவாரியத்தில் சேர்க்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன. தொடர்ந்து, மதியம் 1:00 மணிக்கு கலெக்டர் பிரசாந்தை சந்தித்து கோரிக்கைகள் தொடர்பாக முறையிட்டனர். அப்போது, கோரிக்கையை நிராகரித்ததுடன், கூட்டமைப்பின் முக்கிய நிர்வாகிகளை அவமதித்ததாக கூறி கலெக்டர் அலுவலகம் முன்பு, திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர்.