கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட 3 பேர் கைது, ரூ. 7 ஆயிரம் பறிமுதல் அரசால் தடைசெய்யப்பட்டுள்ள போதைப் பொருள்கள் விற்பனையைத் தடுக்க மாவட்ட போலீசார் தீவிர நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர். அதன்படிப்படையில், ஈரோடு டவுன் போலீசார் தங்களது காவல் எல்லைக்குட்பட்ட வளையக்காரவீதியில் கண்காணிப்பில் ஈடுபட்டிருந்தபோது சந்தேகத்திற்கிடமாக நடமாடிய வாலிபர் ஒருவரைப் பிடித்து விசாரித்தனர். அதில் அவர், அதேபகுதியைச் சேர்ந்த நிஹாத் (22) என்பதும், அரசால் தடைசெய்யப்பட்ட போதைப் பொருளான கஞ்சாவை விற்பனைக்கு வைத்திருந்ததும் தெரியவந்தது.
இதையடுத்து போலீசார் அவர் மீது வழக்குப் பதிவு செய்து கைது செய்தனர். மேலும், அவரிடமிருந்த ரூ. 2,000 மதிப்பிலான 200 கிராம் கஞ்சாவையும் பறிமுதல் செய்தனர். இதேபோல், ஈரோடு வடக்கு போலீசார், கனிராவுத்தர்குளம், காந்திநகர் பகுதியில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டிருந்த வீரப்பன்சத்திரம், கொத்துக்காரர்தோட்டத்தைச் சேர்ந்த கோகுலநாத் (24), அசோகபுரம், நேருவீதியைச் சேர்ந்த சந்திரபிரகாஷ் (25) ஆகியோர் மீது வழக்குப் பதிவு செய்து கைது செய்தனர். மேலும் அவர்களிடமிருந்த ரூ. 7,000 மதிப்பிலான 700 கிராம் கஞ்சாவையும் பறிமுதல் செய்தனர். தொடர்ந்து, அவர்கள் அளித்த தகவலின்பேரில், இதில் தொடர்புடைய ஈ.பி.பி. நகரைச் சேர்ந்த சூரியபிரகாஷைத் தேடி வருகின்றனர்.