பெருந்துறை அருகே வீடு புகுந்து நகை, டிவி திருடிய 2பேர் கைது.

53பார்த்தது
பெருந்துறை அருகே வீடு புகுந்து நகை, டிவி திருடிய 2பேர் கைது.
பெருந்துறை சீனாபுரம் அருகே உள்ள பட்டக்காரன்பாளையத்தை சேர்ந்தவர் அம்சவேணி (50). கடந்த மாதம் 24-ந் தேதி இவர் வெளியூர் சென்றிருந்த நேரத்தில் இவரது வீட்டு கதவை உடைத்து மர்மநபர்கள் உள்ளே புகுந்துள்ளனர். பின்னர் பீரோவை உடைத்து உள்ளே இருந்த 2 பவுன் நகை மற்றும் படுக்கை அறையில் இருந்த டி. வி. யை திருடிச்சென்றனர். இதுகுறித்த புகாரின் பேரில் பெருந்துறை போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்மநபர்களை வலைவீசி தேடி வந்தனர். இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு சப்- இன்ஸ்பெக்டர் பாஸ்கரன் தலைமையிலான போலீசார் பெருந்துறை- பவானிரோட்டில் உள்ள ஆசிரியர் குடியிருப்பு பகுதி அருகே வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த மொபட்டில் டி. வி. யை வைத்து கொண்டு 2 பேர் சென்று கொண்டிருந்தனர். இதனால் சந்தேகம் அடைந்த போலீசார் மொபட்டை தடுத்து நிறுத்தி அவர்களிடம் விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர்கள் நாமக்கல்லைச் சேர்ந்த சரவணன் (46), கணேசன் (46) ஆகியோர் என்பதும், உறவினர்களான இவர்கள் பட்டக்காரன் பாளையத்தில் உள்ள அம்சவேணியின் வீட்டுக்குள் புகுந்து நகை மற்றும் டி. வி. உள்ளிட்ட பொருட்களை திருடி சென்றதும், தற்போது திருடிய டி. வி. யை பெருந்துறை பணிக்கம்பாளையத்தில் குடியிருந்து வரும் வட மாநில தொழிலாளர்களுக்கு விற்க சென்றதாகவும் தெரிவித்தனர். அதைத்தொடர்ந்து அவர்கள் 2 பேரையும் போலீசார் கைது செய்தனர்.

தொடர்புடைய செய்தி