ஈரோடு மாவட்டம் கவுண்டச்சி பாளையம், மாகாளியம்மன் கோவில் வீதியைச் சேர்ந்தவர் ராஜ்குமார் (28). தனியார் நிறுவனத்தில் ஊழியராக பணியாற்றி வந்தார். கடந்த மாதம் 26 ஆம் தேதி தனது மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தபோது எதிர்பாராத விதமாக சாலை விபத்தில் சிக்கினார். உடனடியாக ராஜ்குமாரை மீட்டு சிகிச்சைக்காக தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு அறுவை சிகிச்சை நடந்தது. பின்னர் மேல் சிகிச்சைக்காக ராஜ்குமாரை பெருந்துறையில் உள்ள மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர்.
இந்நிலையில் ராஜ்குமார் மூளை சாவு அடைந்தார். இந்த தகவலை கேட்டு அவரது குடும்பத்தினர் அதிர்ச்சி அடைந்தாலும் பின்னர் ராஜ்குமாரின் உடல் உறுப்புகளை தானம் செய்ய முன் வந்தனர். அதன்படி கல்லீரல், இரு சிறுநீரகங்கள், கண்கள் தானமாக பெறப்பட்டன. பின்னர் ராஜ்குமாரின் உடலுக்கு அரசு சார்பில் மரியாதை செய்யப்பட்டு அவரது குடும்பத்தினரிடம் உடல் ஒப்படைக்கப்பட்டது. ராஜ்குமாருக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை. தந்தையும் கடந்த சில வருடங்களுக்கு முன்பு இறந்து விட்டார். தாயும், இரு சகோதரிகளும் உள்ளனர். இதன் மூலம் பெருந்துறை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் 15-வது உடல் உறுப்பு தான அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.