ஈரோடு மாவட்டத்தில் சட்ட விரோத மதுவிற்பனையை தடுக்கும் வகையில் போலீசார் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். அந்த வகையில், ஈரோடு டவுன் மதுவிலக்கு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பிரகாஷ் தலைமையிலான போலீசார், கொடுமுடி அடுத்த வடக்கு புதுப்பாளையம் பகுதியில் ரோந்துப் பணியில் ஈடுபட்டனர். அப்போது அப்பகுதியில் உள்ள டாஸ்மாக் கடை அருகே, சோளகளிபாளையத்தைச் சேர்ந்த முருகன் (41) என்பவர் சட்ட விரோத மதுவிற்பனையில் ஈடுபட்டது தெரியவந்தது. அவரை கைது செய்த போலீசார், அவரிடம் இருந்த 27 மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர்.
இதுபோல் ஈரோடு மாவட்டம் கணக்கம்பாளையம் கள்ளியங்காடு பகுதியில், போதை அளிக்கக்கூடிய தென்னை மரக்களை இறக்குவதாக, கோபி மதுவிலக்கு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில், அப்பகுதியில் போலீசார் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனர். அங்கு தென்னை மரத்தோப்பில், கள்ளை இறக்கிக் கொண்டிருந்த கள்ளியங்காட்டைச் சேர்ந்த காளியப்பன் (58) என்பவரை கைது செய்த போலீசார், அவரிடம் இருந்த 7 லிட்டர் கள்ளை பறிமுதல் செய்தனர்.