தமிழகத்தில் கர்நாடக, கேரள மாநில தலைவர்களுக்கு சிவப்புக் கம்பளி வரவேற்பு அளிப்பதை கண்டித்து பா.ஜ. கட்சி சார்பில் நேற்று கருப்புக் கொடி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது என மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்தார். அதன்படி தமிழகம் முழுவதும் பா.ஜ. கட்சியினர் நேற்று தங்கள் வீடுகள் முன்பு கருப்புக்கொடி ஏந்தி போராட்டம் நடத்தினர். ஈரோடு மாவட்டத்திலும் நடந்தது. கோபி, கடத்தூர், மொடச்சூர், நாகதேவபாளையம், புதுக்கரைப்புதூர், சந்திராபுரம், வெள்ளாங்கோவில் உள்பட பல்வேறு பகுதிகளில் பா.ஜ. நிர்வாகிகள் அவரவர் வீட்டுக்கு முன்பு நின்று கருப்புக்கொடி ஏந்தி போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் டி.என்.பாளையம் பகுதியிலும் பா.ஜ. கட்சி நிர்வாகிகளும், தொண்டர்களும் தங்களின் வீடுகளின் முன்பு நின்றபடி கருப்புக்கொடி ஏந்தி போராட்டத்தில் ஈடுபட்டனர்.