பொங்கலுக்கு தயார் நிலையில் உள்ள செங்கரும்பு கொள்முதல் செய்ய படையெடுத்து வரும் வியாபாரிகளால் விவசாயிகள் மகிழ்ச்சி
ஈரோடு மாவட்டம் பி.பி.அக்ரஹாரம் காவிரி கரையோரப் பகுதிகள், நாமக்கல் மாவட்டம் குமரபாளையம், பள்ளிபாளையம் உள்ளிட்ட பகுதிகளில், 1000க்கும் மேற்பட்ட ஏக்கர் பரப்பளவில் செங்கரும்பு சாகுபடி செய்யப்பட்டுள்ளது. தைப்பொங்கல் நெருங்கி வரும் நிலையில், ஒரு சில நாட்களில் அறுவடை தொடங்கப்பட உள்ளது. இதன் காரணமாக, ஈரோடு, நாமக்கல், சேலம், கரூர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து செங்கரும்பு கொள்முதல் செய்வதற்கு வியாபாரிகள், பி.பி.அக்ரஹாரம், பள்ளிபாளையம் பகுதிக்கு வந்துள்ளனர்.
இதுகுறித்து பி.பி.அக்ரஹாரம் பேரேஜ் பகுதி விவசாயிகள் கூறியதாவது: ஒரு ஏக்கர் பரப்பளவில் கரும்பு நடவு செய்து அறுவடைக்கு வரும் வரை, ரூ.1 லட்சம் முதல் ரூ.1.30 லட்சம் வரை செலவாகிறது. இப்பகுதியில் ஒரு சில நாட்களில் அறுவடை தொடங்கப்படும். இங்கு சாகுபடி செய்யப்பட்டுள்ள செங்கரும்புகள், காவிரி நீரை ஆதாரமாக கொண்டு சாகுபடி செய்வதால், மிகவும் சுவையாக இருக்கும். இதன் காரணமாக, செங்கரும்பை கொள்முதல் செய்ய, பல்வேறு பகுதிகளில் இருந்து வியாபாரிகள் வந்துள்ளனர். ஒரு சில வியாபாரிகள் முன்பணம் கொடுத்துள்ளனர். ஓரளவு கட்டுப்படியாகும் விலை கிடைப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. இவ்வாறு அவர்கள் கூறினர்.