கொங்கஹள்ளியில் மூன்று மலைகளுக்கு நடுவே, பாறை குகையில் ஸ்ரீ மல்லிகார்ஜுன சுவாமி கோயில் அமைந்துள்ளது. இக்கோயிலில், 18 கிராமங்களைச் சேர்ந்த மக்கள் கலந்து கொள்ளும் குண்டம் திருவிழா ஆண்டுதோறும் பங்குனி மாதத்தில் நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டுக்கான குண்டம் திருவிழா 10-ம் தேதி ருத்ராபிஷேக பூஜையுடன் தொடங்கியது. அதனைத் தொடர்ந்து, கிரிஜம்மா நந்தவனத் தோப்பில் இருந்து, சுவாமிக்கு அணிவிக்கக் கூடிய ஆபரணங்கள், மேளதாள வாத்தியங்களுடன் ஊர்வலமாக கோயிலுக்கு கொண்டு வரப்பட்டது. நேற்று காலை
குண்டம் திருவிழாவையொட்டி, பாறைக் குகையில் உள்ள சுயம்பு லிங்கத்திற்கு சிறப்பு அலங்கார தீபாராதனை நடந்தது. அதன் பின் கோயில் முன் அமைக்கப்பட்டு இருந்த திருக்குண்டத்தில், ஆயிரக்கணக்கான ஆண் பக்தர்கள் பக்தி கோஷம் எழுப்ப பூசாரி மல்லிகர்ஜுனா குண்டம் இறங்கினார். பக்தர்கள் குண்டத்தை வணங்கி வழிபாடு செய்தனர். இங்கு
பூசாரியை தவிர பக்தர்கள் யாரும் குண்டம் இறங்க மாட்டார்கள். இக்கோயிலுக்குள் பெண்கள் நுழைவதில்லை, அவர்கள் 2 கி. மீ தூரத்தில் தடுத்து நிறுத்தப்பட்டனர்.
அதன் பின்னர், மலர்களால் அலங்கரிக்கப்பட்ட புலி வாகனத்தில், மல்லிகார்ஜுன சுவாமி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். சுவாமியை பெண்கள் ஊருக்கு வெளியே உள்ள கிரிஜம்மா நந்தவனத் தோப்பில் வந்து வழிபட்டனர்.