காமதேனு கல்லூரியில் கைத்தறி கண்காட்சி ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் காமதேனு கலை அறிவியல் கல்லூரி மற்றும் ஈரோடு மாவட்ட கைத்தறி துறை இணைந்து கைத்தறி கண்காட்சி கல்லூரி கலையரங்கில் நடைபெற்றது. இவ்விழாவிற்கு காமதேனு கல்வி நிறுவனங்களின் நிறுவன தலைவர் ஆர். பெருமாள்சாமி தலைமை வகித்தார், கல்லூரியின் செயலர் பி. அருந்ததி இணை செயலர் பி. மலர்செல்வி, புல முதன்மையர் நிர்மலா ஆகியோர் முன்னிலை வகித்தனர். முதல்வர் குருமூர்த்தி வரவேற்றார்.
இக்கண்காட்சியை ஈரோடு சரக்கு உதவி அமலாக்க அலுவலர் கா. ரா. ஜெயவேல் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு கண்காட்சியை ரிப்பன் வெட்டி தொடக்கி வைத்தார். விழாவில் கைத்தறி கட்டுப்பாட்டு அலுவலர் ஜி. மாலதி மற்றும் இளநிலை தொழில் நுட்ப உதவியாளர் பரமசிவம் ஆகியோர் கலந்துகொண்டனர். இக் கைத்தறி கண்காட்சியின் மூலமாக நலிந்து வரும் கைத்தறி தொழிலை நவீனமயமாக்கி மேம்படுத்த வழிவகை செய்யப்படுகிறது. கிராமப்புற வேலைவாய்ப்பு உறுதியளிப்பு மற்றும் மாணவர்களிடத்தில் சுய தொழில் தொடங்க ஆர்வம் மற்றும் வழிகாட்டுதல் மற்றும் கைத்தறி நெசவாளர்களின் குழந்தைகளுக்கு கல்வி உதவித்தொகை புதிய தொழில் தொடங்குவதற்கு அரசு மானியம் மற்றும் அரசு தொழில் துறை அணுகுமுறை போன்ற விஷயங்கள் எடுத்துரைக்கப்பட்டன.