ஈரோடு மாநகராட்சியில் 82 சதவீதம் வரி வசூலிக்கப்பட்டுள்ள நிலையில், நிலுவைத்தொகை வைத்துள்ள பெரிய வணிக நிறுவனங்களில் வசூலிக்க மாநகராட்சி வருவாய் பிரிவு அதிகாரிகள் அதிக கவனம் செலுத்தி வருகின்றனர். ஈரோடு மாநகராட்சியில் 2024-2025 நிதியாண்டுக்கான சொத்து வரி, குடிநீர் வரி, தொழில் வரி, குப்பை வரி உள்ளிட்ட வரிகளோடு, கடந்த ஆண்டு வரை நிலுவையிலுள்ள வரியையும் வசூலிக்க தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. வரும் மார்ச் 31-ஆம் தேதிக்குள் 100 சதவீத வரியை வசூலிக்க அதிகாரிகள் திட்டமிட்டிருக்கின்றனர். இதற்காக மாநகராட்சியில் உள்ள வரி வசூல் மையங்கள் விடுமுறை நாள்களிலும் செயல்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ஜி பே, போன் பே ஆகிய செயலிகள் மூலமாகவும் வரிவினங்களை செலுத்தும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இவை தவிர ஈரோடு மாநகராட்சியில் உள்ள 4 மண்டலங்களில் 400 ஊழியர்கள் நியமிக்கப்பட்டு அவர்கள் வரி வசூலிக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும், உதவி வருவாய் அலுவலர்கள், வரி வசூலிப்பவர்கள் மூலம் வீடுகளில் ஆய்வு மேற்கொண்டு, ஜப்தி அறிவிப்புகள் வழங்கியும், அதன் தொடர்ச்சியாக வீடுகளுக்கான குடிநீர் இணைப்பு துண்டிப்பு, கடைகளுக்கு சீல் வைப்பு போன்ற நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. மாநகராட்சியில் நடமாடும் வாகனம் மூலமாகவும் வரி வசூல் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.