ஆசனூர் அருகே கரடிகள் நடமாட்டம் பைக்கில் செல்வோர் பாதுகாப்பாக செல்ல வனத்துறை அறிவுறுத்தல்.
ஈரோடு மாவட்டம் ஆசனூர் அருகே மைசூர் தேசிய நெடுஞ்சாலையில் சத்தி புலிகள் வனப்பகுதியில் புலி, சிறுத்தை, கரடி, மான், யானை உள்ளிட்ட ஏராளமான வன விலங்குகள் வசித்து வருகின்றன. வனவிலங்குகள் வனப்பகுதியில் இருந்து உணவு மற்றும் தண்ணீருக்காக வனச் சாலையை கடந்து செல்வது வழக்கம்.
இந்நிலையில் திண்டுக்கல் - மைசூர் தேசிய நெடுஞ்சாலையில் ஆசனூர் அருகே தேசிய நெடுஞ்சாலையில் இரண்டு கரடிகள் வனப்பகுதியை ஒட்டியுள்ள ரோட்டில் விளையாடியும், உலாவிக் கொண்டு இருந்தன. இதனால் இருசக்கர வாகன ஓட்டிகள் மேற்கொண்டு செல்ல முடியாமல் ரோட்டில் வரிசையாக நின்றன. சிறது நேரத்திற்கு பின் கரடிகள் வனப்பகுதிக்குள் சென்றன.
இந்த காட்சியை அந்த வழியாக சென்ற வாகன ஓட்டிகள் சிலர் செல்போன்களில் வீடியோ எடுத்து சோசியல் மீடியாவில் பதிவிட்டது தற்போது வைரலாகி வருகிறது. இந்த இடத்தில் கடந்த சில நாட்களாகவே கரடிகள் நடமாடி வருவதால் இருசக்கர பவாகன ஒட்டிகள் பீதியடைந்துள்ளனர். இருசக்கர வாகனங்களில்
செல்வோர் கவனமாகச் செல்ல வனத்துறையினர் அறிவுறுத்தி வருகின்றனர்.