ஈரோடு மாவட்டம், தாளவாடி அருகே உள்ள ஆசனூர் பகுதியைச் சேர்ந்தவர் மாதேஷ் (30). இவர் ஜீரகல்லி வனச்சரகத்தில் வனக்காப்பாளராக வேலை பார்த்து வருகிறார். கருத்து வேறுபாடு காரணமாக முதல் மனைவியை பிரிந்த மாதேஷ், தீபா என்பவரை 2-வது திருமணம் செய்து கொண்டார்.
இவர்களுக்கு ஒரு ஆண் மற்றும் பெண் குழந்தையும் உள்ளது. இந்த நிலையில் மாதேஷ் பலரிடம் கடன் வாங்கி உள்ளார். கடன் கொடுத்தவர்கள் பணத்தை திரும்ப கேட்டு வந்த காரணத்தால் 2-வது மனைவி தீபா, சாம்ராஜ் நகரில் உள்ள அவரது பெற்றோர் வீட்டுக்கு சென்று விட்டார். இந்த நிலையில் நேற்று (டிசம்பர் 23) மதியம் தீபா, மாதேஷுக்கு போன் செய்தபோது அவர் போனை எடுக்கவில்லை.
இதையடுத்து, அருகில் வசித்து வருபவர்களின் உதவியுடன் வீட்டில் சென்று பார்க்கச் சொன்னபோது, ஜீரகல்லி வனக்காப்பாளர் குடியிருப்பில் உள்ள வீட்டில், மாதேஷ் தூக்கில் தொங்கிய நிலையில் இருந்துள்ளார். இதையடுத்து அக்கம்பக்கத்தினர் அவரது உடலை மீட்டு தாளவாடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து தாளவாடி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.