ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அடுத்த செண்பகபுத்தூர் அருகே உள்ள முள்ளிக்காபாளையத்தைச் சேர்ந்தவர் யுவராஜ் (45). விவசாயி. இவருக்கு திருமணம் ஆகி ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர்.
இந்நிலையில் நேற்று மாலை 6 மணி அளவில் தோட்டத்தில் இருந்த காரை யுவராஜ் இயக்கி உள்ளார். அப்போது கார் திடீரென பின்னோக்கி சென்றது. அப்போது கார் எதிர்பாராத விதமாக அருகில் இருந்த 80 அடி ஆழ கிணற்றின் தடுப்புச் சுவரை உடைத்துக் கொண்டு உள்ளே பாய்ந்தது. கிணற்றில் 50 அடி ஆழத்துக்கு தண்ணீர் இருந்ததால் கார் தண்ணீரில் மூழ்கியது. இதனால் காரின் உள்ளே இருந்த யுவராஜ் வெளியே வர முடியாமல் தண்ணீருக்குள் மூழ்கினார். அருகில் இருந்தவர்கள் இதை பார்த்து அதிர்ச்சி அடைந்து நடந்த சம்பவம் குறித்து சத்தியமங்கலம் போலீசார் மற்றும் சத்தியமங்கலம் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். தீயணைப்பு வீரர்கள் கயிறு கட்டி கிணற்றில் இறங்கி காரையும், யுவராஜையும் மீட்க முயற்சியில் ஈடுபட்டனர். 50 அடி ஆழத்துக்கு தண்ணீர் இருந்ததால் மீட்பு பணியில் தொய்வு ஏற்பட்டது. இரவு 11 மணி வரை தொடர்ந்து மீட்பு பணியில் ஈடுபட்டனர்.
இதனை அடுத்து பவானிசாகரில் இருந்து 4 மீனவர்களை வரவழைத்தனர். இவர்கள் 4 பேரும் நீச்சலில் கை தேர்ந்தவர்கள்.