அந்தியூர்: விவசாய தோட்டத்துக்குள் முகாமிட்டுள்ள ஒற்றை யானை

77பார்த்தது
ஈரோடு மாவட்டம், அந்தியூர் அடுத்த மாத்தூர் அருகே உள்ள மோத்தங்கல்புதூர் வனப்பகுதியை ஒட்டிய விவசாய தோட்டத்தில் புகுந்த யானை நாசம் செய்து வருகிறது. கடந்த ஒரு வாரத்துக்கும் மேலாக ஒற்றை யானை, அப்பகுதியில் பயிரிட்டுள்ள வாழை, கரும்பு, எலுமிச்சை உள்ளிட்ட பயிர்களை தின்று சேதப்படுத்தி வருகிறது. 

இரவு எட்டு மணிக்கு பிறகு, விவசாய தோட்டத்திற்குள் புகுந்த யானை விடிந்தும் அங்கிருந்து செல்வதில்லை. இதைக் கண்டு, அப்பகுதியில் உள்ள விவசாயிகள் விரட்டினால், அவர்களை துரத்தி அச்சுறுத்துகிறது, தோட்ட பகுதியில் வீட்டருகில் உள்ள வாழை மரங்களையும் தின்கிறது. இதனால், வீட்டை விட்டு வெளியே வர முடியாமலும், பயத்திலும் விவசாயிகள் உள்ளனர். 

மோத்தங்கல்புதூர் ஊருக்குள்ளும் சென்று பயம் காட்கிறது. ஒரு வாரத்தில், அப்பகுதியில் உள்ள ஐயன் தோட்டத்தை சேர்ந்த ராஜா என்பவரது தோட்டத்திலும், சோமு என்பவரது தோட்டத்திலும் நூற்றுக்கணக்கான வாழை மரங்களை தின்று சேதப்படுத்தியுள்ளது. இதுகுறித்து சென்னம்பட்டி வனத்துறையினருக்கு தகவல் கொடுத்து சம்பவ இடத்தில் வந்து பார்வையிட்டனர். 

ஆனாலும், யானையை கட்டுக்குள் கொண்டு வர வனத்துறையினர் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என விவசாயிகள் கூறுகின்றனர். கடந்த 20 நாட்களுக்கு முன்பு, எண்ணமங்கலம் பகுதியில் உள்ள வனப்பகுதியில் அங்கப்பன் என்பவரை மிதித்து கொன்ற யானை இதுதான் என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்தி