திண்டுக்கல்லில் இருந்து மாலை 4: 20 மணிக்கு புறப்பட்டு வடமதுரை, அய்யலுார் வழியே மாமரத்துப்பட்டிக்கு மாலை 5: 35 மணிக்கு சென்றடையும் அரசு டவுன் பஸ், நேற்று மாலை வடமதுரை வந்தது. பள்ளி முடிந்து வீடு திரும்பும் மாணவர்கள் உள்ளிட்ட ஏராளமான பயணியர் ஏறினர். இதனால் பஸ் ஒரு பக்கம் சாய்ந்த நிலையிலே வடமதுரை நான்கு வழிச்சாலையை அடைந்தது. பஸ் பாடியின் மீது டயர் உரசியதால் கடும் சத்தத்துடன் புகை வர துவங்கியது. டிரைவர் பஸ்சை சாலையோரம் நிறுத்தினார்.
அதிக பயணியர் ஏறியதுதான் பிரச்னைக்கு காரணம் என கண்டறிந்தனர். அங்கு வந்த நெடுஞ்சாலை ரோந்து போலீசார் சில பயணியரை இறக்கி விட்டனர். அதன்பின் பஸ் மீண்டும் புறப்பட்டு சென்றது. போலீசார் கூறுகையில், 'இதே நேரத்தில் வர வேண்டிய மற்றொரு பஸ் நடுவழியில் பழுதாகி நின்றதால், இந்த பஸ்சில் கூடுதல் பயணியர் ஏறினர். இதனால் பிரச்னை ஏற்பட்டது' என்றனர்.