பழனியை நெய்க்காரப்பட்டி கே. வேலூர் அருள்மிகு மண்டு காளியம்மன் உச்சி காளியம்மன் கோவிலில் கடந்த மாதம் வைகாசி திருவிழா விமரிசையாக துவங்கியது. நேற்று சண்முகநதியில் இருந்து மேளதாளங்களுடன் புனித நீர் கொண்டு வரப்பட்டு அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது. இரவு அம்மன் ரத ஊர்வலம் நடைபெற்றது. இன்று காலை நடைபெற்ற பூக்குண்டம் இறங்கும் விழாவில் ஐந்தாயிரத்திற்கும் மேற்பட்ட ஆண்களும், பெண்களும் பூக்குண்டம் இறங்கி நேர்ச்சை செலுத்தினர். சுமார் 4 மணி நேரம் பூக்குண்டம் இறங்கும் நிகழ்ச்சி நிறைவுபெற்றது. கோயில் முறைகாரர் முதலில் இறங்கியவுடன் பக்தர்கள் இறங்கினர். இரண்டு கைகளிலும் தீச்சட்டி, குழந்தைகள், கரும்பு தொட்டிலில் குழந்தை, அம்மன் வேடமணிந்து என பல்வேறு வகையில் பக்தர்கள் பூக்குண்டம் இறங்கி வேண்டுதலை நிறைவேற்றினர். ஒருவர் நாதஸ்வரம் இசைத்தபடியே பூக்குழி இறங்கினார். தொடர்ந்து கிடா வெட்டுதல், பொங்கல் வைத்தல் என விழா நடைபெற்றது. இதில் சுற்றுப்புற கிராமங்களில் இருந்து ஏராளமானோர் கலந்து கொண்டனர். பக்தர்களின் வருகை அதிகமாக காணப்பட்டதால் இன்ஸ்பெக்டர் தென்னரசு தலைமையில் ஏராளமான போலீஸார் பாதுகாப்பு பணியில் போலீசார் ஈடுபட்டனர்.