திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் மேல்மலை பகுதியான கூக்கால் கிராமத்தில் ஆயிரத்துக்கு மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். இவர்களின் பிரதான தொழிலாக விவசாயம் மட்டுமே செய்து வருகின்றனர்.
இந்நிலையில் இந்த பகுதியில் இருக்கக்கூடிய தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தின் சார்பாக இங்கு இருக்கக்கூடிய விவசாயிகளுக்கு வட்டியில்லா கடன் தொகையாக ஒவ்வொருவருக்கும் 50 ஆயிரம் முத்ல் 1 லட்சம் வரை கடன் தொகை வழங்கப்பட்டதாக கூறப்படுகிறது.
இங்குள்ள விவசாயிகள் வாங்கிய கடனை குறிப்பிட்ட தொகையை கட்டியதாக கூறுகிறார்கள்.
இருந்த போதும் அவர்களுக்கு பணம் கட்டியதற்கான ரசீது மற்றும் வங்கியில் வரவு செலவு செய்ததற்கான புத்தகம் எதுவும் கொடுக்கவில்லை என குற்றம் சாட்டப்படுகிறது.
மேலும் வாங்கிய கடனுக்கு மேலாக வட்டியுடன் சேர்த்து கூடுதலாக, அதாவது இரண்டு மடங்கு தொகையை அதிகாரிகள் கேட்பதாக விவசாயிகள் குற்றம் சாட்டியுள்ளனர்.
இது குறித்து பலமுறை இந்த கூட்டுறவுக்கான சங்கத்தில் கேட்டபோது அவர்கள் முறையாக பதில் அளிக்கவில்லை எனவும் , வாங்கிய கடன் தொகையை உடனடியாக கட்ட வேண்டும் என கூறியதாக தெரிகிறது.
இதனையடுத்து ஆத்திரமடைந்த கூக்கால் கிராமத்தில் உள்ள 50 க்கு மேற்பட்ட விவசாய மக்கள் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தின் அலுவலகம் முன்பாக அமர்ந்து உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.