தமிழ்நாட்டில் நடந்த பிளஸ் 2 தேர்வில் 600 க்கு 600 மதிப்பெண்களை பெற்ற கூலித் தொழிலாளியின் மகள் நந்தினி எந்த கல்லூரியில் மேற்படிப்பு படிக்க சேர்ந்துள்ளார் தெரியுமா? தமிழ்நாடு பிளஸ் 2 தேர்வு
முடிவுகள் கடந்த 8ஆம் தேதி வெளியானது. இந்த நிலையில் திண்டுக்கல் மாவட்டத்தை பொருத்தவரை 9, 689 மாணவர்கள், 11 ஆயிரத்து 113 மாணவிகள் என மொத்தம் 20, 802 பேர் பிளஸ் 2 தேர்வு எழுதினர். இதில் 8, 840 மாணவர்கள், 10, 665 மாணவிகள் என மொத்தம் 19, 505 பேர் தேர்ச்சி பெற்றனர். இது 93. 77 சதவீதம் ஆகும். மாநில அளவில் தேர்ச்சி விகிதத்தில் திண்டுக்கல் மாவட்டம் 21 ஆவது இடத்தை பிடித்துள்ளது. பிளஸ் 2 தேர்வில் அரசு உதவி பெறும் பள்ளியான திண்டுக்கல் அண்ணாமலையார் பெண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவி நந்தினி அனைத்து பாடங்களில் 600-க்கு 600 பெற்று சாதனை படைத்துள்ளார். அதாவது தமிழ் உள்பட அனைத்து பாடங்களிலும் 100-க்கு 100 மதிப்பெண்களை எடுத்துள்ளார்.
அவர் மாநில அளவில் முதலிடத்தை பிடித்திருக்கிறார். 600-க்கு 600 மதிப்பெண்கள் எடுத்து அவர் சாதனை படைத்துள்ளார். அவர் வணிகவியல் பிரிவு எடுத்திருந்தார். இந்த மாணவியை தொலைபேசியில் தொடர்பு கொண்ட பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தொலைபேசியில் பேசி வாழ்த்து தெரிவித்தார். அது போல் தனது வீட்டுக்கு மாணவியையும் அவருடைய குடும்பத்தினரையும் வரவழைத்த அமைச்சர் பெரியசாமி வாழ்த்தி நினைவு பரிசை வழங்கினார். அது போல் முதல்வர் ஸ்டாலினை நேரில் சந்தித்த மாணவி நந்தினி அவரிடம் ஆசி பெற்றார். மேலும் உயர்கல்விக்கு தேவையான அனைத்து உதவிகளையும் தான் செய்வதாக முதல்வர் வாக்குறுதி அளித்திருந்தார். நந்தினியின் தந்தை சரவணக்குமார் ஒரு தச்சுத் தொழிலாளி. அவரது தாய் பானுப்பிரியா இல்லத்தரசி. திண்டுக்கல்லில் உள்ள தனியார் பள்ளியில் 7ஆம் வகுப்பு படித்து வருகிறார். மாணவி நந்தினி 10 ஆம் வகுப்பில் 491 மதிப்பெண்களை பெற்றுள்ளார். இந்த மாணவி நந்தினிக்கு கவிஞர் வைரமுத்து தங்க பேனாவை பரிசாக கொடுப்பதாக தெரிவித்திருந்தார். அதன்படி திண்டுக்கல்லில் மாணவியை அவருடைய வீட்டில் சந்தித்த வைரமுத்து தங்க பேனாவை கொடுத்தார். அது போல் நிறைய தன்னார்வலர்கள் மாணவிக்கு கால்குலேட்டர், செல்போன் உள்ளிட்டவற்றை பரிசாக கொடுத்து வருகிறார்கள். இந்த நிலையில் மாணவி நந்தினி எந்த கல்லூரியை தேர்வு செய்வார் என்ற கேள்வி எழுந்தது. அந்த வகையில் அவருக்கு சீட் கொடுக்க நிறைய கல்லூரிகள் அழைப்பு விடுத்திருந்த நிலையில் அவர் கோவை பிஎஸ்ஜி கல்லூரியை தேர்வு செய்துள்ளார். இந்த கல்லூரி நிர்வாகம் அவருக்கு தேவையான உதவிகளை செய்வதாக தெரிவித்துள்ளது. இந்த கல்லூரியில் சேர்ந்ததில் தனக்கு மகிழ்ச்சி என்றும் நந்தினி தெரிவித்துள்ளார்.