அனைத்து தரப்பு மக்களிடமும் செல்போன் இருப்பதால் ஆன்லைனில் பொருட்கள் ஆர்டர் செய்வது அதிகரித்து உள்ளது. இதனால் ஆன்லைன் நிறுவனங்களும் பல்வேறு சலுகைகளை அளித்து வருகிறது. இவ்வாறு ஆர்டர் செய்யும் பொருட்கள் பார்சலில் வீடுகளுக்கே வந்து விடுவதால், பலர் ஆர்டர் செய்து வருகிறார்கள். திண்டுக்கல் அனுமந்த நகரை சேர்ந்த பெண் ஒருவர் ஆன்லைனில் ஒரு சுடிதாரை பார்த்தார். உடனே அதை வாங்குவதற்காக ஆர்டர் செய்தார். அவருக்கு நேற்று அந்த சுடிதார் வந்து சேரும் என்று தகவல் தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து அந்தப் பெண்ணுக்கு பார்சல் வந்தது. உடனே அவர் தான் ஆர்டர் செய்த சுடிதார் வந்து உள்ளது என்று நினைத்து அதை வாங்கி ஆவலுடன் பிரித்தார். அப்போது பார்சலில் கிழிந்த ஜீன்ஸ் பேண்ட்டின் ஒரு பகுதி மட்டும் இருந்தது. இதனால் அதிர்ச்சியில் உறைந்த அவர், அந்த பார்சலை கொண்டு வந்த நபரிடம் கேட்டார். அதற்கு அவர் எனக்கு பார்சலை உங்கள் முகவரிக்கு கொண்டு கொடுக்கும் வேலைதான்.
ஆனால் அதில் வந்தது பற்றி எதுவும் தெரியாது என்று கூறினார். உடனே அவர் தான் ஆர்டர் செய்த ஆன்லைன் நிறுவனத்தின் வாடிக்கையாளர் மைய அதிகாரிகளுக்கு தொடர்பு கொண்டு பேசினார். ஆனால் அவர்கள் உரிய பதிலை தெரிவிக்கவில்லை என்று கூறப்படுகிறது. இந்த விவகாரம் தொடர்பாக சைபர் கிரைம் போலீசார் கூறியதாவது, பார்சலில் சந்தேகம் இருந்தால் சம்பந்தப்பட்ட நிறுவனத்தில் ஒப்படைக்க வேண்டும் என்றனர்.