நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் பகுதியை சேர்ந்த எல். ஐ. சி. ஏஜன்ட் முத்துசாமி 40. குடும்பத்துடன் உடுமலைப்பேட்டையில் வசிக்கிறார்.
திண்டுக்கல் மாவட்டம் வத்தலகுண்டு அண்ணா நகரை சேர்ந்த விஜய் சசிதரன்35, மனைவி கவுரி38. பெற்றோர் உடுமலைப்பேட்டையில் இருந்ததால் அடிக்கடி அங்கு சென்று வந்தனர். அப்போது முத்துசாமிக்கும், விஜய்சசிதரன் குடும்பத்திற்கும் பழக்கம் ஏற்பட்டது. பங்குச்சந்தையில் முதலீடு செய்தால் பலமடங்காக திரும்ப பெறலாம் என முத்துசாமியிடம் விஜய்சசிதரன் கூறினார்
இதை நம்பிய முத்துசாமி நிலம், நகைகளை விற்று விஜய் சசிதரனிடம் ரூ. 1 கோடி கொடுத்தார். முதல் தவணை லாபமாக விஜய் சசிதரன் ரூ. 75 லட்சத்தை முத்துசாமியிடம் கொடுத்தார். இதன் பிறகு அதிக ஆசை கொண்ட முத்துச்சாமி ரூ. 1. 75 கோடியை விஜய் சசிதரனிடம் கொடுத்தார்.
விஜய் சசிதரன் குடும்பத்தோடு தலைமறைவானார். திண்டுக்கல் மாவட்ட குற்றப்பிரிவு போலீசில் முத்துசாமி புகார் அளித்தார். எஸ். பி. , பிரதீப் உத்தரவில் இன்ஸ்பெக்டர் முத்துலட்சுமி, எஸ். ஐ. , கார்த்திகேயன் தலைமையிலான போலீசார் விசாரித்தனர். விஜய் சசிதரன், கவுரி மீது ஏற்கனவே பல மாவட்டங்களில் இது போன்ற மோசடி வழக்குகள் இருப்பது தெரிந்தது. அவர்களை தேடும் பணியில் போலீசார் ஈடுபட்டுள்ளனர்.