சிறுமலை: சிறுவனுக்கு துப்பாக்கிச் சூடு.. பரபரப்பு

85பார்த்தது
திண்டுக்கல் மாவட்டம் நத்தம் பெரியமலையூரை சேர்ந்தவர் சின்னச்சாமி. இவருக்கு திருமணம் ஆகி சுசிலா என்ற மனைவியும் ரகுபதி (வயது 17) என்ற மகனும் உள்ளனர். சின்னச்சாமி கடந்த ஒரு மாதமாக தென்மலையில் உள்ள தனியார் எஸ்டேட்டில் குடும்பத்துடன் தங்கி தோட்ட வேலை செய்து வருகிறார். ரகுபதி நத்தத்தில் 11-ம் வகுப்பு வரை படித்துள்ளான். தனது தந்தையுடன் சேர்ந்து தென்மலையில் உள்ள எஸ்டேட்டில் தங்கி இருந்தான். 

இந்த நிலையில் கடந்த 28-ம் தேதி அதே பகுதியை சேர்ந்த தோட்ட தொழிலாளி சக்தி மகன் சிவசக்தியுடன் (10) விளையாடிக்கொண்டிருந்தான். அப்போது தனியார் எஸ்டேட்டின் உரிமையாளரின் ஏர்கன்னை சிறுவன் சிவசக்தி எடுத்து வந்து ரகுபதியிடம் காட்டி விளையாடிக்கொண்டிருந்தான். அப்போது எதிர்பாராதவிதமாக துப்பாக்கி வெடித்ததில் எதிரே நின்ற ரகுபதியின் வயிற்றுப் பகுதியில் குண்டு பாய்ந்தது. இதில் அவன் படுகாயமடைந்து வலியால் அலறி துடித்தான். 

ரகுபதியின் அலறல் சத்தம் கேட்டு அங்கு ஓடிவந்த சின்னச்சாமி மற்றும் சகதொழிலாளர்கள், படுகாயங்களுடன் உயிருக்கு போராடிக்கொண்டிருந்த ரகுபதியை மீட்டு தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு அவனுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதற்கிடையே தகவலறிந்த தாலுகா காவல் நிலைய ஆய்வாளர் பாலமுருகன் மற்றும் போலீசார் தனியார் மருத்துவமனைக்கு விரைந்து சென்று, ரகுபதியிடம் சம்பவம் குறித்து கேட்டறிந்தனர்.

தொடர்புடைய செய்தி