நத்தம் அருகே சொறிப்பாறைபட்டியில் நடந்த ஜல்லிகட்டில் காளைகள் முட்டியதில் மாடுபிடி வீரர்கள் 13 பேர் உட்பட 27 பேர் காயம் அடைந்தனர். நத்தம் அருகே சொறிப்பாறைப்பட்டி முத்துமாரியம்மன், பாலமுருகன் கோயில் திருவிழாவையொட்டி நேற்று ஜல்லிக்கட்டு நடந்தது. இதை ஆர். டி. ஓ. , பிரேம்குமார், தாசில்தார் சுகந்தி தொடங்கி வைத்தனர். முதலில் வாடிவாசலிலிருந்து ஊர் கோயில் காளைகள் அவிழ்த்து விடப்பட்டது. அதன் பின் ஒன்றன் பின் ஒன்றாக காளைகள் அவிழ்த்து விடப்பட்டன. திண்டுக்கல், சிவகங்கை, திருச்சி, மதுரை, தேனி, புதுக்கோட்டை, சிவகங்கை உள்ளிட்ட பல மாவட்டங்களை சேர்ந்த 457 காளைகள் அவிழ்த்து விடப்பட்டன. 5 சுற்றுகளாக நடந்த போட்டியில் 150 மாடுபிடி வீரர்கள் கலந்து கொண்டனர். பிடிபடாத மாட்டியின் உரிமையாளர்களுக்கும், காளைகளை மடக்கிய வீரர்களுக்கும் வெள்ளி காசுகள், கட்டில், பீரோ, குக்கர், பேன், சேர், வேட்டி, டைனிங் டேபிள், ரொக்க பரிசு உள்ளிட்ட பல்வேறு பரிசு பொருட்கள் வழங்கப்பட்டன. காளைகள் முட்டியதில் மாடுபிடி வீரர்களான நத்தம்- உலுப்பகுடியை சேர்ந்த சங்கரபாண்டியன் 21, மதுரை - உசிலம்பட்டியை சேர்ந்த அருண்பாண்டி 24, மதுரையை சேர்ந்த நாகராஜ் 22, அலங்காநல்லுாரை சேர்ந்த சரவணன் 28, கொட்டாம்பட்டியை சேர்ந்த கணபதி 22, உட்பட 27 பேர் காயமடைந்தனர். எஸ். பி. , பாஸ்கரன் பரிசு வழங்கினார். முன்னாள் எம். எல். ஏ. , ஆண்டிஅம்பலம், நத்தம் ஒன்றிய குழு தலைவர் ஆர். வி. என். கண்ணன், அ. ம. மு. க. , மாவட்ட இளைஞர் பாசறை செயலாளர் ராஜா கலந்து கொண்டனர்.