சிவகங்கை மாவட்டம் காளையார் கோவில் பகுதியைச் சேர்ந்த தங்கவேல் மகன் ராஜ்குமார் (வயது 47) என்பவர் திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில் இருந்து காளையார் கோவிலுக்கு லாரியில் செங்கல் ஏற்றிக்கொண்டு வந்துள்ளார்.
அப்போது திண்டுக்கல் மாவட்டம் நத்தம் கோபால்பட்டி அருகே வந்து கொண்டிருந்த போது அதிகாலை நேரம் என்பதாலும் சாலையின் நடுவே இருந்த தடுப்பில் இருந்த எச்சரிக்கை விளக்கு எரியாததால் லாரி சாலையில் இருந்த சென்டர் மீடியனில் பலமாக மோதி விபத்துக்குள்ளானது. இதில் லாரியின் முன்பக்க டயர்கள் சேதமடைந்தும், டீசல் டேங்க் முற்றிலும் சேதமடைந்து சாலை முழுவதும் சிதறி பரவலாக கிடந்தது. இந்த விபத்தில் லாரி ஓட்டுநர் சிறு காயங்களுடன் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார். இதுகுறித்து சம்பவ இடத்தில் சாணார்பட்டி போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.
திண்டுக்கல் முதல் கொட்டாம்பட்டி வரை உள்ள சாலை தடுப்புகளில் இதுவரை 50க்கும் மேற்பட்ட வாகனங்கள் விபத்தில் சிக்கி சேதம் அடைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
மேலும் இதுபோன்று அடிக்கடி விபத்து ஏற்படும் பகுதிகளில் உள்ள சாலை தடுப்புகளை அகற்ற வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்.