நிலக்கோட்டையை அடுத்த விளாம்பட்டி கிராமத்தில் உள்ள முத்தாலம்மன் கோயில் தெருவில் வசித்து வரும் பாண்டி மனைவி சரஸ்வதி (45). சலவைத் தொழிலாளி. இவர், வேலைக்குச் சென்று விட்டு வீடு திரும்பும்போது, தனது சுருக்குப் பையுடன் ரூ. 7 ஆயிரத்தை தவறவிட்டதாகக் கூறப்படுகிறது. சரஸ்வதி பல இடங்களில் தேடியும் அந்தச் சுருக்குப் பை கிடைக்காததால் விளாம்பட்டி காவல் நிலையத்தில் புகார் செய்தார்.
இந்த நிலையில், விளாம்பட்டி ஓடைத் தெருவைச் சேர்ந்த மகேஸ்வரன் (50) என்பவர் அந்தத் தெருவில் கீழே கிடந்த சுருக்குப் பையை எடுத்து பார்த்த போது, அதில் ரூ. 7 ஆயிரம் இருந்தது. இதை விளாம்பட்டி காவல் நிலையத்தில் காவல் ஆய்வாளர் ஷர்மிளாவிடம் அவர் ஒப்படைத்தார். அவர் இந்தப் பணத்தை சரஸ்வதியிடம் ஒப்படைத்தார். இதைத் தொடர்ந்து மகேஸ்வரனின் நேர்மையைப் பாராட்டி காவல் ஆய்வாளர் ஷர்மிளா, மகேஸ்வரனுக்கு சால்வை அணிவித்துப் பாராட்டினார்.