திண்டுக்கல் மாவட்ட ஆட்சித்தலைவராக பொறுப்பேற்றுள்ள சரவணன் பவானி வட்டம், மைலம்பாடி கிராமத்தைச் சார்ந்தவர். தந்தை பெயர் செல்வன். தாயார் பெயர் பாப்பாள், விவசாய குடும்பத்தைச் சார்ந்தவர்கள். மனைவி பெயர் பிரியதர்ஷினி, இரண்டு குழந்தைகள் உள்ளனர்.
பள்ளிக் கல்வியை அரசு பள்ளிகளில் பயின்று, உயர் கல்வியை அரசு கல்லூரியில் படித்தார். பின்னர் ஒன்றிய அரசுப்பணியாளர் தேர்வாணையம் தேர்வுக்காக அரசு பயிற்சி நிறுவனங்களில் பயிற்சி பெற்றார். ஐ. டி. துறையில் 3 ஆண்டுகள் பணியாற்றியுள்ளார். பின்னர் இந்திய வருவாய்த் துறையில் பணியாற்றினார்.
அதன் பின்னர், 2016-ஆம் ஆண்டு இந்திய ஆட்சி பணிக்கு தமிழக பிரிவில் தேர்ச்சி பெற்று, தூத்துக்குடி மாவட்டத்தில் உதவி ஆட்சியர் பயிற்சியாக தனது பணியை தொடங்கினார். காஞ்சிபுரம் மாவட்டத்தில் சார் ஆட்சியராக பணியாற்றினார். அப்போது, காஞ்சிபுரத்தில் அத்திவரதர் வைபவம்-2019 ஒருங்கிணைப்பு செய்தல் பணிகள் மேற்கொண்டார். ஈரோடு வணிக வரித் துறையில் இணை ஆணையர், ஊரக வளர்ச்சித் துறையில் கூடுதல் இயக்குநர் மற்றும் மதுரையில் கூடுதல் ஆட்சியர்(வளர்ச்சி) ஆகவும் பணியாற்றினார்.
தற்போது, சென்னை பெருநகர குடிநீர் வாரியம் மற்றும் வடிகால் வாரியத்தில் செயல் இயக்குநராக பணிபுரிந்து வந்த இவர், திண்டுக்கல் மாவட்ட ஆட்சித்தலைவராக நியமிக்கப்பட்டதையடுத்து இன்று திண்டுக்கல் மாவட்ட ஆட்சித்தலைவராக பொறுப்பேற்றுக் கொண்டார்.