திண்டுக்கல் மாவட்டத்தில் 6.85 லட்சம் குடும்ப அட்டைகள் உள்ளன. இதில் பிஹெச்சி (ப்ரையாரிட்டி ஹவுஸ்ஹோல்டு), ஏஏவை (அந்தியோதய அன்ன யோஜனா) குடும்ப அட்டைதாரர்கள் என 2 லட்சம் பேர் உள்ளனர். இந்த அட்டைகளில் சுமார் 10.78 லட்சம் பேர் உறுப்பினர்களாக இடம்பெற்றுள்ளனர். இந்த உறுப்பினர்கள் அனைவரும் தங்களது அடையாளங்களை மார்ச் 31-ஆம் தேதிக்குள் கேஓஐசி முறையில் பதிவு செய்ய வேண்டும் என அறிவுறுத்தப்பட்டு, அதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன.
தற்போது வரை 8.44 லட்சம் உறுப்பினர்கள், தங்களது அடையாளங்களை கேஓஐசி முறையில் பதிவு செய்துள்ளனர். மேலும் 2.33 லட்சம் பேர் பதிவு செய்யாமல் உள்ளனர். மார்ச் 31-ஆம் தேதிக்குள் பதிவு செய்யத் தவறினால், அவர்களின் பெயர் நீக்கப்படுவதற்கும் வாய்ப்பு உள்ளது. எனவே, ஏஏவை குடும்ப அட்டை வைத்திருக்கும் பயனாளிகள், அந்தந்த நியாய விலைக் கடைகளுக்குச் சென்று தங்களது அடையாளத்தை பதிவு செய்து கொள்ள வேண்டும். வெளியூரில் இருந்தாலும், வெளிமாநிலங்களில் இருந்தாலும், அந்தந்த பகுதியிலுள்ள நியாய விலைக் கடைகளிலும் இந்த பதிவை மேற்கொள்ளலாம் என அதிகாரிகள் தெரிவித்தனர்.