திண்டுக்கல் மாவட்டத்தில் 12வது புத்தகத் திருவிழா நடைபெற உள்ளதை முன்னிட்டு, வாகனப் பிரச்சாரத்தை மாவட்ட ஆட்சித்தலைவர் சரவணன் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கொடியசைத்து தொடங்கி வைத்து, மாணவ, மாணவிகளுக்கு இலவச சேமிப்பு உண்டியல்களை வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில், மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவித்ததாவது: - திண்டுக்கல் மாவட்ட நிர்வாகம், பொது நூலக இயக்ககம் மற்றும் திண்டுக்கல் இலக்கியக் களம் ஆகியவை சார்பில் திண்டுக்கல் மாவட்டத்தில் 12வது புத்தகத் திருவிழா திண்டுக்கல் அங்கு விலாஸ் மேல்நிலைப்பள்ளி மைதானத்தில் 28.08.2025 அன்று தொடங்கி 07.09.2025 வரை நடைபெற உள்ளது. இதை முன்னிட்டு, புத்தகத் திருவிழா தொடர்பான விழிப்புணர்வு வாகன பிரச்சாரம் இன்று (09.06.2025) தொடங்கி வைக்கப்பட்டுள்ளது. மேலும், மாணவ, மாணவிகளிடையே புத்தக வாசிப்பில் ஆர்வத்தை ஏற்படுத்தும் விதமாகவும், சிறுசிறு பணம் சேமித்து அவர்களே புத்தகம் வாங்கும் பழக்கத்தை ஊக்குவிக்கும் விதமாக மாவட்டம் முழுவதும் மாணவ, மாணவிகளுக்கு சுமார் 32,000 உண்டியல்கள் வழங்கப்படவுள்ளது.
இன்றைய தினம் மட்டும் சுமார் 2500 உண்டியல்கள் வழங்கப்படுகிறது என மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவித்தார். இந்நிகழ்ச்சியில், மாவட்ட வருவாய் அலுவலர் ஜெயபாரதி, திண்டுக்கல் இலக்கிய களம் தலைவர் முனைவர் மனோகரன் ஆசிரியர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.