திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் சரவணன் தலைமையில் நடைபெற்றது.
தமிழ்நாடு அரசின் உத்தரவின்படி, பொதுமக்களின் குறைகளை களைவதற்காகவும், பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்களை பெற்று, உரிய விசாரணை மேற்கொண்டு, தகுதியான பயனாளிகளுக்கு அரசின் நலத்திட்ட உதவிகள் வழங்குவதற்காகவும், மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம், மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தலைமையில் திங்கள்கிழமைதோறும் நடைபெற்று வருகிறது. இன்றைய கூட்டத்தில் பொதுமக்களிடமிருந்து 227 மனுக்கள் பெறப்பட்டன. பொதுமக்களின் கோரிக்கை மனுக்களை, சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களிடம் வழங்கி தகுதியான மனுக்கள் மீது விரைந்து நடவடிக்கை மேற்கொள்ள மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் அறிவுறுத்தினார்.
இன்றையக் கூட்டத்தில், தமிழ்நாடு கட்டுமானத் தொழிலாளர்கள் நலவாரியம் சார்பில் உயர் கல்வி மருத்துவப் படிப்பு பயில கல்வி உதவித்தொகை ஒரு மாணவருக்கு ரூ. 50, 000, திருமண உதவித்தொகை 10 பயனாளிகளுக்கு தலா ரூ. 20, 000, விபத்து மரண உதவித்தொகை ஒரு பயனாளிக்கு ரூ. 2. 05 இலட்சம், இயற்கை மரண உதவித்தொகை 6 பயனாளிகளுக்கு தலா ரூ. 55, 000 மற்றும் ஒரு பயனாளிக்கு ரூ. 25, 000 என மொத்தம் 19 பயனாளிகளுக்கு ரூ. 8. 10 இலட்சம் மதிப்பீட்டிலான நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் வழங்கினார்.