புரட்டாசி மாத 3-வது சனிக்கிழமையையொட்டி திண்டுக்கல்லில் உள்ள பெருமாள் கோவில்களில் நேற்று சிறப்பு வழிபாடு நடைபெற்றது. இதையொட்டி கோவில்களில் சாமி தரிசனம் செய்ய பக்தர்கள் குவிந்தனர். அதன்படி, திண்டுக்கல் மலையடிவாரம் சீனிவாச பெருமாள் கோவிலில் காலை 5 மணியளவில் திருப்பள்ளி எழுச்சி நடந்தது.
அதன்பிறகு சுவாமிக்கு பால், பழம், பன்னீர் உள்பட 16 வகையான சிறப்பு திருமஞ்சனம் செய்யப்பட்டு ராஜ அலங்காரம் நடந்தது. அத்துடன் கோவில் மண்டபத்தில் உற்சவர் ஸ்ரீதேவி, பூதேவி சமேத சீனிவாச பெருமாளுக்கு மலர் அலங்காரம், தீபாராதனை நடைபெற்றது. இதேபோல் திண்டுக்கல் நாகல்நகர் வரதராஜ பெருமாள் கோவிலில் காலை 6 மணியளவில் சுவாமி, தாயார் அம்பாள், ஆஞ்சநேயருக்கு சந்தனம், வாசனை திரவியங்கள் உள்ளிட்ட 16 வகையான சிறப்பு அபிஷேகம் நடந்தது.
அதைத்தொடர்ந்து சுவாமிக்கு கல்அங்கி சிறப்பு அலங்காரம், தீபாராதனை நடைபெற்றது. திண்டுக்கல் எம். வி. எம். நகர் தென் திருப்பதி வெங்கடாசலபதி கோவிலில் நேற்று முன்தினம் சுவாமி, அம்பாளுக்கு சிறப்பு திருமஞ்சனம் செய்யப்பட்டது. பின்னர் நேற்று காலையில் மூலவர் வெங்கடாசலபதி, பத்மாவதி தாயார், விநாயகர், சக்கரத்தாழ்வார், ஆஞ்சநேயர் மற்றும் லட்சுமி நரசிம்மர் ஆகிய சாமிகளுக்கு முத்தங்கி சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது.