திண்டுக்கல் எரியோடு சாலையிலுள்ள பெஸ்கி கல்லூரி எதிா்புறம் அமைந்துள்ள நுண் உர செயலாக்க மையத்தில் குப்பைகளை அரைவை செய்யும் நவீன கருவி பொருத்தப்பட்டது. தனியாா் பங்களிப்புடன் ரூ. 21. 24 லட்சத்தில் பொருத்தப்பட்ட இந்தக் கருவிகளை மாநகராட்சி ஆணையா் ந. ரவிச்சந்திரன் புதன்கிழமை பயன்பாட்டுக்காக தொடங்கிவைத்தாா்.
நிகழ்ச்சியில் மாநகர நல அலுவலா் பரிதாவாணி, உதவிச் செயற்பொறியாளா் சுவாமிநாதன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
இதுதொடா்பாக ஆணையா் ந. ரவிச்சந்திரன் கூறியதாவது:
இந்த நவீன கருவிகள் மூலம், குப்பைகளை அரைவை செய்யும் போது நீரை பிழிந்து வெளியேற்றிவிட்டு, சக்கையை மட்டும் தனியாக பிரித்து எடுக்கிறது. இந்த சக்கைகளை 7 நாள்கள் உலர வைத்து, மேலும் ஒரு இயந்திரத்தில் அரைத்தால் உரமாக மாற்ற முடியும். இதன் மூலம் 40 முதல் 50 நாள்கள் வரை காத்திருக்க வேண்டிய அவசியம் ஏற்படாது. 7 நாள்களில் விரைவாக நுண் உரமாக மாற்றிவிடலாம்.
நாளொன்றுக்கு 5 முதல் 10 டன் குப்பை கழிவுகளை அரைக்க முடியும். ஏற்கெனவே ஆா்எம். காலனி நுண் உர செயலாக்க மையத்தில் இதே போல நவீன இயந்திரம் பொருத்தப்பட்டிருக்கிறது என்றாா்.