திண்டுக்கல்: ஆக்கிரமிப்பின் பிடியில் நத்தம் பேருந்து நிலையம் இருப்பதால் பயணிகள் அவதிப்படுகின்றனர். நத்தம் பேருந்து நிலையம் புதுக்கோட்டை, காரைக்குடி , சிவகங்கை, மதுரை ஆகிய மாவட்டங்கள் இணைக்கும் மையமாக உள்ளது. தினமும் நூற்றுக்கு மேற்பட்ட பஸ்கள் மற்றும் வாகனங்கள் வந்து செல்கின்றன. இங்குள்ள பஸ் ஸ்டாண்ட்டில் சுகாதாரம் என்பது கேள்விக்குறியாக உள்ளது. சுற்றுப்பகுதியில் உள்ள அனைத்து கிராம மக்களும் அதிக அளவு வந்து செல்வதால் ஆங்காங்கு வெற்றிலை பாக்கு போட்டு உமிழும் சம்பவம் அதிகமாக நடக்கிறது. இதனால் சுகாதாரமென்பது நத்தம் பஸ் ஸ்டாண்டில் கேள்விக்குறியான விஷயமாக மாறிவிட்டது. இந்நிலையில் பஸ்கள் ஆங்காங்கே டிராக்கில் நிறுத்தாமல் அவர்கள் இஷ்டம் போல் நிறுத்துவதால் நெரிசலும் ஏற்படுகிறது. நத்தம் பேருந்து நிலையத்தின் உள்ளே பேரூராட்சி நிர்வாக அனுமதியின்றி ஆங்காங்கே பெட்டி கடைகள் முளைத்துள்ளன. இதனால் பயணிகள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகின்றனர். அதை உடனடியாக அகற்ற பேரூராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.