திண்டுக்கல் மாவட்டம் மன்னவனூர் ஊராட்சி பகுதியில் ஒன்றிய துவக்கப்பள்ளி பல வருடங்களாக செயல்பட்டு வருகிறது. இப்பள்ளிக்கு மன்னவனூர் மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் இருந்து சுமார் 200 மாணவ மாணவிகள் படிப்பதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் கோடை விடுமுறை முடிந்து பள்ளி துவக்கப்பட்ட நிலையில் பள்ளி மாணவ மாணவிகளுக்கு தேவையான அடிப்படை வசதியான குடிநீர் மற்றும் கழிப்பறைக்கு செல்வதற்கு தண்ணீர் என எந்த ஏற்பாடும் பள்ளி நிர்வாகத்தாலும் ஊராட்சியாலும் செய்து தரப்படவில்லை
மேலும் ஏழை எளிய மாணவர்கள் பயன்பெறும் வகையில் மதிய உணவு திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. அந்த மதிய உணவு திட்டத்திற்கும் தண்ணீர் இல்லாத காரணத்தால் உணவு தயாரிக்கப்படாமல் பள்ளி மாணவ மாணவிகளுக்கு உணவு வழங்காமல் வீட்டிற்கு அனுப்பி உள்ளனர். இப்பகுதியில் உள்ள பொதுமக்கள் அனைவரும் விவசாய கூலி தொழிலுக்கும் விவசாயத்திற்கும் செல்லும் சூழ்நிலையில் திடீரென மாணவ மாணவிகளை மதிய உணவு இல்லை எனக் கூறி அனுப்பியதால் மாணவ மாணவிகள் பள்ளியிலிருந்து என்ன செய்வதென்று தெரியாமல் வீட்டிற்கு சென்ற அவல நிலை ஏற்பட்டது.
மேலும் மாநில அரசும் மாவட்ட நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என இப்பகுதி மக்களிடையே கோரிக்கை எழுந்து வருகிறது.