திண்டுக்கல் மாவட்டம், ஆத்தூர் பகுதியில், ஆத்தூர், அக்கரைப்பட்டி, எஸ். பாறைப்பட்டி, பழைய செம்பட்டி, கோடாங்கிப்பட்டி, வண்ணம்பட்டி உள்ளிட்ட கிராமப் பகுதிகளில் நெல் விவசாயம் அதிக அளவில் நடைபெற்று வருகிறது. இதையடுத்து, விவசாயிகள் நலன் கருதி ஆத்தூர், சித்தையன்கோட்டை, கதிர்நாயக்கன்பட்டி, அய்யங்கோட்டை ஆகிய பகுதிகளில் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம் சார்பில் நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் அமைக்கப்பட்டன. இங்கு விவசாயிகள் தகுந்த ஆவணங்களை சமர்ப்பித்து தாங்கள் அறுவடை செய்த நெல் மணிகளை 40 கிலோ கொண்ட மூட்டையாக கட்டி ரூ. 980-க்கு விற்கின்றனர்.
இந்த நிலையில், இந்தப் பகுதியில் உள்ள நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் விவசாயிகளிடம் மூட்டை ஒன்றுக்கு ரூ. 50 கட்டாய வசூல் நடைபெறுவதாக புகார் எழுந்துள்ளது. இதனால் பெரும்பாலான விவசாயிகள் தங்கள் நெல் மணிகளை விதை நெல்லுக்காக வியாபாரிகளுக்கு விற்பனை செய்வதாக கூறப்படுகிறது. இதனால், நேரடி நெல் கொள்முதல் நிலையங்களுக்கு நெல் வரத்து குறைந்துள்ளது.