தர்மபுரி மாவட்டம், கோபிநாதம்பட்டி காமியன்சாமிபுரம் பகுதியில் மின்சாரத்தை திருட்டுத்தனமாக பயன்படுத்தி வருவதாக, மின்வாரிய அதிகாரிகளுக்கு புகார் சென்றதன் பேரில் கடத்தூர் மின்வாரிய உதவி செயற்பொறியாளர் ரமேஷ் மற்றும் ஊழியர்கள் நேற்று (டிச.24) மாலை சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை மேற்கொண்டனர்.
அப்போது அந்த பகுதியில் உள்ள தனியார் இரும்பு தொழிற்சாலையில், திருட்டுத்தனமாக மின்சாரத்தை எடுத்து பயன்படுத்தி வருவது தெரியவந்தது. இதுகுறித்து உதவி செயற்பொறியாளர் ரமேஷ், கோபிநாதம்பட்டி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் காவலர்கள் விசாரணை செய்ததில் திருட்டுத்தனமாக மின்சாரத்தை பயன்படுத்தியதன் மூலம் அரசுக்கு 57,67,421 ரூபாய் இழப்பீடு ஏற்பட்டிருப்பது தெரிந்தது. இதுகுறித்து காவலர்கள் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.