முஸ்லிம்களின் முக்கிய பண்டிகைகளில் ஒன்றான ஈகை திருநாளாம் பக்ரீத் பண்டிகை இன்று நாடு முழுவதும் சிறப்பாக கொண்டாடப்பட்டது. இதையொட்டி ஆங்காங்கே உள்ள ஈத்கா மைதானம் மற்றும் மசூதிகள், பள்ளிவாசல்களில் சிறப்பு தொழுகை நடைபெற்றது. இதில் அந்தந்த பகுதியைச் சேர்ந்த ஏராளமான முஸ்லிம்கள் கலந்து கொண்டு சிறப்பு தொழுகை நடத்தினர். பின்னர் ஒருவருக்கொருவர் பக்ரீத் பண்டிகை வாழ்த்துக்களை பரிமாறிக் கொண்டனர். இந்த தொழுகைக்குப் பின்னர் முஸ்லிம்கள் ஏழைகளுக்கு ஆட்டு இறைச்சி தானமாக வழங்கினர். இன்று தர்மபுரி நகர அனைத்து மசூதிகள் கூட்டமைப்பின் சார்பில் கிருஷ்ணகிரி ரோட்டில் உள்ள ஈத்கா மைதானத்தில் பக்ரீத் பண்டிகை சிறப்பு தொழுகை இன்று காலை நடைபெற்றது. இதில் தர்மபுரி நகரில் உள்ள ஆயிரக்கணக்கான முஸ்லிம்கள் புத்தாடை அணிந்து பங்கேற்று சிறப்பு தொழுகை நடத்தினர்.
பின்னர் ஒருவருக்கொருவர் கட்டித்தழுவி பக்ரீத் பண்டிகை வாழ்த்துக்களை பரிமாறி கொண்டனர். இதற்கான ஏற்பாடுகளை தமிழ்நாடு அகலே சுன்னத் ஐக்கிய ஜமாத் மாநில துணைச் செயலாளர் எக்பால், மாவட்ட முத்தவல்லிகள் சங்கத் தலைவர் ஜப்பார், செயலாளர் டி. கே. பாபு, நகர அனைத்து மசூதிகளின் கூட்டமைப்பின் தலைவர் முனவர் ஜான், பொருளாளர் முஸ்தாக், துணை தலைவர் பாபு மற்றும் நிர்வாகிகள் செய்து இருந்தனர். தொடர்ந்து முஸ்லிம்கள் ஏழைகளுக்கு குர்பானி, அன்னதானம் உள்ளிட்ட பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கினர்.