தர்மபுரி மாவட்டம், நல்லம்பள்ளி வட்டத்திற்குட்பட்ட தொப்பூர் அருகே குறிஞ்சி நகர் பகுதியைச் சேர்ந்தவர் பழனி கூலித் தொழிலாளி. இவருக்கு திருமணமாகி மனைவி, ஒரு மகன் உள்ளனர். நேற்று மாலை அவர் வேலைக்குச் சென்று விட்டு, சனிச்சந்தை பகுதியில் உள்ள தர்மபுரி - சேலம் தேசிய நெடுஞ்சாலையை நடந்து கடக்க முயன்றார். அப்போது அந்த வழியாக வந்த கார் ஒன்று கட்டுப்பாட்டை இழந்து பழனி மீது மோதியது. இந்த விபத்தில் தூக்கி வீசப்பட்டு அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
இந்த விபத்து காரணமாக அந்தப் பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதுகுறித்து தொப்பூர் காவலருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து காவலர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விபத்தில் இறந்த பழனியின் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தர்மபுரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து தொப்பூர் காவலர்கள் இன்று வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.