தர்மபுரி மாவட்ட வன அலுவலருக்கு, அரூர் அருகேயுள்ள வேப்பம்பட்டி காப்புக்காடு பகுதியில் புள்ளிமானை சிலர் வேட்டையாடி உள்ளதாக தகவல் கிடைத்தது. அதன்பேரில் தீர்த்தமலை வனச்சரக அலுவலர் தலைமையில், நேற்று (பிப்ரவரி 06) வன பணியாளர்கள் குழுவுடன் சென்று சோதனையிட்டனர்.
அப்போது, வேப்பம்பட்டி காப்புக்காட்டில் கண்ணி வலை வைத்து, புள்ளிமானை வேட்டையாடியதாக அம்மாபாளையம் கணேசன் (எ) சின்னதுரை, கீரைப்பட்டி புதூர் அசோக் ஆகிய இருவரையும் சுற்றிவளைத்து பிடித்தனர். தொடர்ந்து வனஉயிரின பாதுகாப்பு சட்டப்படி, மாவட்ட வன அலுவலர் உத்தரவின் பேரில், புள்ளிமானை வேட்டையாடிய 2 பேருக்கு தலா ரூ.60 ஆயிரம் வீதம் ரூ.1.20 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டது.