தர்மபுரி:
தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் பட்டாசு உற்பத்தி நிலையங்கள், பட்டாசு சில்லறை விற்பனை நிலையங்கள் மற்றும் வெடிமருந்து குடோன்கள் ஆகியவற்றை ஆய்வு செய்வது குறித்து வருவாய்த்துறை, காவல்துறை, தீயணைப்பு-மீட்புத்
துறை அலுவலர்களுடன் ஆய்வுக்கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் கி. சாந்தி தலைமையில் இன்று (09. 10. 2023) நடைபெற்றது.
வருவாய்த்துறையினர் வெடிமருந்து குடோன்களையும், பட்டாசு விற்பனை நிலையங்களையும், மாதம் இருமுறை ஆய்வு செய்யுமாறும், ஆய்வின்போது காவல்துறையினருக்கும் தகவல் தெரிவித்து அவர்களுடன் இணைந்து தணிக்கை மேற்கொள்ளுமாறும் தெரிவிக்கப்பட்டது. மேலும் ஆய்வின்போது, இருப்புப் பதிவேட்டில் உள்ளவாறு இருப்பு உள்ளனவா என்பதையும், உரிமம் வழங்கப்பட்ட அளவுக்குட்பட்டு விற்பனை செய்யப்பட்டு வருகின்றனவா என்பதையும், பட்டாசுகள் மற்றும் வெடிமருந்துகளை பாதுகாப்பான முறையில் இருப்பு வைத்துள்ளனரா என்பதையும், அரசு விதிமுறைகளுக்குட்பட்டு பாதுகாப்பு நடவடிக்கைகள் கடைப்பிடிக்கப்பட்டு வருகின்றதா என்பதை உறுதிபடுத்திடவும் அறிவுறுத்தப்பட்டது.
இக்கூட்டத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்டீபன் ஜேசுபாதம், தருமபுரி வருவாய் கோட்ட அலுவலர் டி. ஆர். கீதாராணி, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) பழனிதேவி, மாவட்ட தீயணைப்பு அலுவலர் (பொ) மகாலிங்க மூர்த்தி, வட்டாட்சியர்கள் உள்ளிட்ட அரசுத்துறை அலுவலர்கள் கலந்துகொண்டனர்.