மத்திய அரசு மீனவர்களுக்காக செயல்படுத்தும் பல்வேறு திட்டங்கள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் சாகர் பரிக்ரமா- கட்டம் -9 திட்டத்தின் கீழ் கடலூர் முதுநகர் மீன்பிடி துறைமுகத்தில் விழிப்புணர்வு கூட்டம் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது.
இதற்கு மத்திய மீன்வளம் மற்றும் பால்வளத்துறை மந்திரி பர்ஷோத்தம் ரூபலா தலைமை தாங்கி, மத்திய அரசு திட்டங்கள் குறித்து மீனவர்களிடம் பேசினார். தொடர்ந்து மத்திய இணை மந்திரி எல். முருகனுடன் சேர்ந்து மீனவர் கடன் அட்டை திட்டத்தின் கீழ் கடலூர் மாவட்டத்தை சேர்ந்த 136 பேருக்கு ரூ. 60 லட்சத்து 85 ஆயிரம் வங்கி கடன் ஆணையை வழங்கினார். ஒருவருக்கு குளிர் காப்பு வசதியுடன் கூடிய 4 சக்கர வாகனம் (40 சதவீத மானியம்) ரூபாய் 20 லட்சத்தில் வாங்குவதற்கான ஆணையும் வழங்கப்பட்டது.