கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் கடலூர் மாவட்டத்தில் வாகன சோதனையின்போது சோதனை மேற்கொள்ளும் வாகன விவரங்களை E. Beat app பதிவு செய்ய வேண்டும் என வழங்கிய அறிவுரையின்பேரில் கடலூர் மாவட்டம் முழுவதும் வாகன சோதனை மேற்கொண்டு வாகன விபரங்களை மேற்படி ஆப்பில் பதிவு செய்து வருகின்றார்கள்.
கடந்த 16 ஆம் தேதி பெண்ணாடம் காவல் உதவி ஆய்வாளர் பாக்யராஜ் முதல் நிலை காவலர் கோபாலகிருஷ்ணன் ஆகியோர் பெண்ணாடம் புதிய பேருந்து நிலையம் அருகே வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தபோது வேகமாக வந்த இருசக்கர வாகனத்தை நிறுத்தி சோதனை செய்ய முற்பட்டபோது வாகனத்தில் வந்தவர் இறங்கி தப்பி ஓடி விட்டார்.
மேற்படி வாகனத்தை கைப்பற்றி வாகன விவரங்களை E Beat App-ல் பதிவேற்றம் செய்தபோது மேற்படி வாகனம் 2022 ஆண்டு சேலம் அரசு மருத்துவமனை காவல் நிலையத்தில் வாகனம் காணாமல் போனதாக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது என E Beat App இருப்பதை உதவி ஆய்வாளர் பாக்யராஜ் கண்டுபிடித்தார். பின்னர் சம்பந்தப்பட்ட காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்து முறைப்படி சேலம் அரசு மருத்துவமனை காவல் நிலைய உதவி ஆய்வாளரிடம் ஒப்படைக்கப்பட்டது.
மேற்சொன்ன தகுந்த பணிபுரிந்த உதவி ஆய்வாளர் பாக்யராஜ், முதல்நிலை காவலர் கோபாலகிருஷ்ணன் ஆகியோரை கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் பாராட்டு சான்றிதழ் மற்றும் பரிசு வழங்கி பாராட்டினார்.