கோவை உப்பிலிப்பாளையம் ராமானுஜம் நகரை சேர்ந்தவர் ஆறுமுகம் (53), கட்டிட தொழிலாளி. மதுபழக்கம் உள்ள அவர் தனது மனைவியை பிரிந்து தனியாக வசித்து வந்தார். இந்த நிலையில் அவர் கடந்த 19ம் தேதி வீட்டில் படுக்கையில் படுத்துக்கொண்டு பீடியை பற்ற வைத்து தீக்குச்சியை வீசியுள்ளார்.
அது படுக்கையின் மீது விழுந்து தீப்பற்றி உள்ளது. தீ மளமளவென பரவி அவரது உடல் மீதும் பிடித்தது. இதனால் அவர் அலறி துடித்தார். அவரின் சத்தத்தை கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வந்தனர். அவர்கள் தீயை அணைத்து ஆறுமுகத்தை மீட்டு கோவை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். ஆனால், அங்கு அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து சிங்காநல்லூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்