சங்கோதிபாளையத்தில் உள்ள தனியார் நிறுவனத்தில் 2½ டன் இரும்பு பொருட்களை திருடிய இரண்டு பேர் நேற்று கைது செய்யப்பட்டனர். சூலூரை அடுத்த சங்கோதிபாளையத்தில் தனியார் நிறுவனம் ஒன்று உள்ளது. இங்கு குமரேசன் (41) என்பவர் வேலை பார்த்து வந்தார். சம்பவத்தன்று இந்த நிறுவனத்திற்கு லாரியில் இரும்பு கம்பிகள் வந்தன. அவற்றை இறக்கி வைக்குமாறு கூறிவிட்டு நிறுவன பொறுப்பாளர் சாமுவேல்ராஜ் சாப்பிடச் சென்றார். அவர் திரும்பி வந்து பார்த்தபோது நிறுவனத்தில் இருந்த 2½ டன் இரும்பு பொருட்களை காணவில்லை. உடனே அந்த நிறுவன ஊழியர்கள் தேடிப் பார்த்தபோது கணியூர் சோதனைச் சாவடி அருகே லாரி நின்றது. உடனே அந்த லாரி மற்றும் இரும்பு பொருட்களை திருடிய குமரேசன் மற்றும் லாரி டிரைவர் சந்தோஷ்குமார் (45) ஆகியோரை மடக்கிப் பிடித்து சூலூர் போலீசில் ஒப்படைத்தனர். விசாரணையில் அவர்கள் லாரியில் இரும்பு பொருட்களை திருடி சென்றது தெரியவந்தது. உடனே அவர்கள் 2 பேரையும் போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.