கோவை மாவட்டம், பொள்ளாச்சி அருகேயுள்ள ஊஞ்சவேலாம்பட்டியைச் சேர்ந்த வியாபாரி புவியரசு (37), தனது உறவினரான ரம்யா (37) மற்றும் அவரது குடும்பத்தினரால் ரூ. 1.64 கோடி மோசடி செய்யப்பட்டார். மகளிர் சுய உதவி குழுவில் முதலீடு செய்தால் அதிக லாபம் கிடைக்கும் என்று ரம்யா மற்றும் அவரது கணவர் நாகராஜன், தாயார் பரிமளா, தந்தை பூமிநாதன் ஆகியோர் புவியரசுவை நம்ப வைத்துள்ளனர்.
உறவினர்கள் என்பதால் அவர்களை நம்பிய புவியரசு, 2023 ஆம் ஆண்டு முதல் தவணையாக ரூ. 4.90 லட்சம் முதலீடு செய்தார். அதன் பிறகு பல்வேறு தவணைகளில் மொத்தம் ரூ. 1.64 கோடி முதலீடு செய்துள்ளார். திடீரென பணம் தேவைப்பட்டதால், புவியரசு தனது முதலீட்டை திரும்பக் கேட்டபோது, ரம்யா மற்றும் அவரது குடும்பத்தினர் பணத்தைத் திருப்பித் தராமல் காலம் தாழ்த்தியுள்ளனர். பின்னர், பணத்தைத் தர மறுத்து புவியரசுவை மிரட்டியுள்ளனர். இது குறித்து புவியரசு மாவட்ட கோவை குற்றப்பிரிவு போலீசில் புகார் அளித்தார். புகாரின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்த போலீசார், ரம்யாவை நேற்று கைது செய்து அவரிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.