கோவை மருதமலை அடிவார பகுதியில் வனத்துறையினர் கடந்த 30ம் தேதி ரோந்து பணி மேற்கொண்டிருந்த போது, யானை பிளிறும் சத்தம் கேட்டுள்ளது. தொடர்ந்து அப்பகுதியில் ஆய்வு செய்த போது 40 வயது மதிக்கத்தக்க பெண் யானை ஒன்று குட்டியுடன் இருப்பது தெரியவந்தது அந்த பெண் யானைக்கு உடல் நலம் குன்றிய நிலையில் குட்டி யானை அதன் தாய் அருகிலேயே நின்றது. இதனைத் தொடர்ந்து, வனத்துறை மருத்துவப் பணியாளர்கள் அந்த பெண் யானைக்கு தீவிர சிகிச்சை அளித்தனர்.
இதனிடையே தாய் அருகே நின்று கொண்டிருந்த 3 மாத குட்டி யானை வனப்பகுதிக்குள் சென்றது. அந்த குட்டி யானையை வனத்துறையினர் தொடர்ந்து கண்காணித்து வந்தனர்.உடல் நலம் தேறிய பெண் யானை வனப்பகுதிக்குள் விடப்பட்டது. தொடர்ந்து பெண் யானையுடன் குட்டியை சேர்க்கும் பணியில் வனத்துறையினர் ஈடுபட்டனர். ஆனால் அந்த முயற்சி தோல்வியில் முடிந்தது.
இதனால், மருதமலை வனச்சரகத்திற்கு உட்பட்ட பகுதியில் கடந்த 2 நாட்களாக குட்டி யானை பராமரிக்கப்பட்டு வந்த நிலையில், இன்று அதிகாலை முதுமலை தொப்பக்காடு யானைகள் முகாமுக்கு கொண்டு செல்லப்பட்டது