கோவை: பெண்களை ஆட்டு மந்தையுடன் அடைப்பதா? - வானதி கேள்வி

69பார்த்தது
கோவை: பெண்களை ஆட்டு மந்தையுடன் அடைப்பதா? - வானதி கேள்வி
கோவை தெற்கு சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன் இன்று வெளியிட்டிருக்கும் செய்தி குறிப்பில், அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் அங்கு படிக்கும் மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டது தமிழ்நாட்டையும் தாண்டி, நாடு முழுவதும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. 

இந்த விவகாரத்தில் மாணவியின் புகாரில் குறிப்பிட்டுள்ள 'யார் அந்த சார்?' என்பது இதுவரை கண்டறியப்படவில்லை. யாரோ முக்கியப் புள்ளி ஒருவரைக் காப்பாற்ற திமுக அரசு முயற்சிக்கிறதோ என்ற சந்தேகம் அனைவருக்கும் ஏற்பட்டுள்ளது. பாலியல் வன்கொடுமைக்கு ஆளான அண்ணா பல்கலைக்கழக மாணவிக்கு நீதி கேட்டு, இன்று மதுரையில் நீதிக்காக அணிதிரண்ட பாஜக மகளிரணியினரை காவல் துறையினர் கைது செய்துள்ளனர். அங்கு நூற்றுக்கணக்கான ஆடுகளையும் அடைத்து வைத்துள்ளனர். 

பாசிச ஹிட்லர் தான் இப்படி கொடூரமாக சிந்தித்து மக்களை வாட்டி வதைத்தார் என வரலாற்றில் படித்திருக்கிறோம். அதை இன்று திமுக ஆட்சியில் நேரடியாகப் பார்க்கிறோம். அரசுக்கு எதிராக, அநீதிகளுக்கு எதிராகப் போராடுவது இந்திய அரசியலமைப்புச் சட்டம் தந்துள்ள அடிப்படை உரிமை. போராடும் உரிமை உள்ள நாடுதான் ஜனநாயக நாடாக இருக்க முடியும். போராடுபவர்களை அதுவும் பெண்களை ஆடு மந்தைகளுடன் அடைத்து வைப்பது திமுக அரசின் அதிகார ஆணவத்தை, குரூர மனப்பான்மையைக் காட்டுகிறது. இதற்கு தமிழ்நாட்டு மக்கள் சரியான நேரத்தில் சரியான பாடம் புகட்டுவார்கள் என கூறியுள்ளர்.

தொடர்புடைய செய்தி