மத்திய அரசின் கிராமப்புற வளர்ச்சித் திட்டங்களின் செயல்பாடுகளை ஆய்வு செய்ய வந்த மத்திய நாடாளுமன்ற அமைச்சரவை அதிகாரிகள் மற்றும் அலுவலர்கள் குழுவினர், தமிழ்நாட்டில் இத்திட்டங்கள் மிகச் சிறப்பாகச் செயல்படுத்தப்பட்டு வருவதாகப் பாராட்டினர். குறிப்பாக, மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம் பாராட்டுக்குரிய வகையில் செயல்படுவதாகத் தெரிவித்தனர். இந்த ஆய்வின் ஒரு பகுதியாக, கோவை மாவட்டம், சூலூர் பகுதிகளில் உள்ள கிட்டம்பாளையம் மற்றும் அரசூர் கிராம ஊராட்சிகளில் குழுவினர் நேற்று ஆய்வு மேற்கொண்டனர். தானியங்கி நீர் தேக்க தொட்டி, கிட்டம்பாளையத்தில் உள்ள பசுமை வனம், மற்றும் ஊராட்சி முன்களப் பணியாளர்களின் விவசாயத் தோட்டத்தையும் அவர்கள் பார்வையிட்டு, நடைபெற்று வரும் பணிகள் குறித்து கேட்டறிந்தனர்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய நாடாளுமன்றச் செயலக பயிற்சி மையத்தின் இணை இயக்குனர் நமிதா மாலிக், மத்திய அரசு வழங்கும் நிதிகள் தமிழ்நாட்டில் உரிய முறையில் பயன்படுத்தப்படுவது பெருமைக்குரிய விஷயம் எனத் தெரிவித்தார். தமிழகத்தில் கிராமப்புற வளர்ச்சித் திட்டங்கள் மிகவும் சிறப்பாகச் செயல்படுத்தப்பட்டு வருவது, இத்திட்டங்களின் நோக்கத்தை அடைவதற்கு பெரிதும் உதவுகிறது என்றார்.