கோவை காளப்பநாயக்கன் பாளையம் கணுவாயில் ஒர்க்ஷாப் உள்ளது. இங்கு நேற்று பாம்பு ஒன்று பதுங்கி இருந்தது. இதனை பார்த்த ஊழியர்கள் பிரபல பாம்பு பிடி வீரரான கணுவாயை சேர்ந்த முரளி (44) என்பவருக்கு தகவல் கொடுத்தனர். உடனே அங்கு வந்த முரளி பட்டறையில் மேஜை அடியில் சுருண்டு கிடந்த பாம்பை பிடிக்க முயன்றார். அப்போது அது கொடிய விஷமுள்ளகட்டு விரியன் பாம்பு என தெரிய வந்தது. அந்தப் பாம்பை லாவகமாக பிடித்து சாக்கு பைக்குள் போடுவதற்கு அவர் முயன்ற போது எதிர்பாராதமாக காலில் கடித்தது. கட்டு விரியன் பாம்பு என்பதால் உடனே கடித்த இடத்தில் ரத்தத்தை வெளியேற்றி முதல் கட்ட உதவி மூலமாக அங்கிருந்தவர்கள் அவரை காப்பாற்ற முயன்றனர். ஆனால் அதற்குள் விஷம் ஏறி முரளி உயிருக்கு போராடினார். அதன் பிறகு அவரை 108 ஆம்புலன்ஸ், மூலம் மருத்துவமனைக்கு கொண்டு செல்ல முயன்றனர். ஆனால் அதற்குள் அவர் இறந்துவிட்டார். அதன் பிறகு வனத்துறை மற்றும் வடவள்ளி போலீசார் அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து வடவள்ளி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். பாம்பு கடித்து உயிர் இழந்த முரளி கடந்த 15 ஆண்டுகளாக ஏராளமான பாம்புகளை பிடித்துள்ளார். இதனால் அவர் பாம்பு முரளி என அடையாளத்துடன் அழைக்கப்பட்டுள்ளார்.